பாட்னா: நான் ஒன்றும் வானிலை அறிவிப்பாளன் கிடையாது; ஆனால் சொல்வது நடக்கின்றது என்று பிகார் தேர்தல் முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் பிகாரின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களில் ஒருவர். தேர்தலின் போது நாட்டில் எந்த விதமான அரசியல் சூழல் நிலவுகிறது; யாருக்கு எதிராக அல்லது ஆதரவாக அலை வீசுகிறது என்பது குறித்துக் கணிப்பதில் கெட்டிக்காரர். இதன் காரணமாக முன்னாள் மத்திய அமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரான லாலு பிரசாத் யாதவ் இவரை அரசியலில் 'வானிலை அறிவிப்பாளன்' என்று கூறியிருந்தார்.
இவருடைய கட்சியுடன் கூட்டணி அமைத்துதான் பிகாரில் மக்களவைத் தேர்தலை பாஜக சந்தித்தது. 1977-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் துவங்கி தொடர்ச்சியாகத் தேர்தலில் போட்டியிட்டு வந்த பஸ்வான, இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை. அவருக்குப் பதிலாக அவருடைய மகன் சிராக் பஸ்வான் போட்டியிட்டார்.
தேர்தலுக்கு முன்னதாக அவர் செய்தியாளர்களிடம், 'இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பிகாரில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்' என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நான் ஒன்றும் வானிலை அறிவிப்பாளன் கிடையாது; ஆனால் சொல்வது நடக்கின்றது என்று பிகார் தேர்தல் முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஞாயிறன்று வெளியான தேர்தல் முடிவுகளில் பிகாரில் பாஜக கூட்டணி பஸ்வான் கணித்தத்தற்கு நெருக்கமாக 39 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதுதொடர்பாக வெள்ளியன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
எதிர்க்கட்சிகள் கூறுவது போல நான் ஒன்றும் வானிலை அறிவிப்பாளன் கிடையாது; ஆனால் மக்களின் உள்ளத்தை அறிந்து கொண்டு, ஆராய்ந்து நான் கூறுவது அப்படியே நடக்கிறது.
இம்முறையும் தேர்தலில் 'மோடி சுனாமி' இருக்கும் என்று முன்பே வெளிப்படையாக கூறியவர்களில் நானும் ஒருவன். அதேபோல் என் கட்சியானது கடந்த முறையை விட கூடுதலாக போட்டியிட்ட ஆறு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
புதிதாக அமையவுள்ள மோடி அமைச்சரவையில் பங்கேற்பதற்கு சிராக் பஸ்வான் தகுதியானவராக இருப்பார்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.