கர்நாடகத்தில் இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜகவும், காங்கிரஸூம் தலா ஓரிடத்தில் வெற்றி பெற்றுள்ளன.
தார்வாட் மாவட்டம், குந்தகோல் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த சி.எஸ்.சிவள்ளி, கடந்த மார்ச் 22-ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். இதேபோல, கலபுர்கி மாவட்டத்தின் சின்சோளி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த உமேஷ் ஜாதவ், பாஜகவில் இணைந்தார்.
இந்த நிலையில், காலியான குந்தகோல், சின்சோளி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மே 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. குந்தகோல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக மறைந்த சிவள்ளியின் மனைவி குசுமவதியும், பாஜக வேட்பாளராக சிக்கன்ன கெளடரும்; சின்சோளி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சுபாஷ் ராத்தோடும், பாஜக வேட்பாளராக உமேஷ் ஜாதவின் மகன் அவினாஷ் ஜாதவும் போட்டியிட்டனர்.
வியாழக்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் குந்தகோல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் குசுமவதி 77,640 வாக்குகளுடன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சிக்கன்ன கெளடரை 1,601 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதேபோல, சின்சோளி சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக முதல்முறையாக போட்டியிட்டிருந்த அவினாஷ் ஜாதவ் 69,109 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சுபாஷ் ராத்தோடை 8,030 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.