தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
17-வது மக்களவைக்கான தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டம் இன்று (சனிக்கிழமை) மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக மோடியின் பெயரை அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் நிதின் கட்கரி ஆகியோர் முன்மொழிந்தனர். இதற்கு கூட்டணி கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில், கூட்டணி கட்சித் தலைவர்களான தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார், சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்கள் பாஜக நாடாளுமன்றக் குழு தலைவராக தேர்வு செய்வதற்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதையடுத்து, பிரதமர் மோடி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சி அமைப்பதற்காக உரிமை கோருகிறார். அதைத்தொடர்ந்து, அவர் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
இந்த கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர்கள் எல்கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.