புது தில்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை இன்று இரவு சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளார் பிரதமர் மோடி.
16வது மக்களவையைக் கலைப்பதற்கான பரிந்துரையை குடியரசுத் தலைவரிடம் மோடி நேற்று வழங்கினார். இந்த பரிந்துரையை ஏற்று, 16வது மக்களவையைக் கலைத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று மதியம் உத்தரவை பிறப்பித்தார்.
இந்த நிலையில், தில்லியில் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் புதிதாக தேர்வான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்க உள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, இன்று இரவு 8 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கவிருக்கும் பிரதமர் மோடி, மக்களவைக்குத் தேர்வான தேஜக உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதத்தை அளித்து மத்தியில் ஆட்சியமைக்க உரிமை கோர திட்டமிட்டுள்ளார்.