புது தில்லி: மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்தாலும், நாட்டுக்காக தொடர்ந்து பாடுபட உறுதி பூண்டுள்ளோம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
புது தில்லியில் இன்று காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்துக்குப் பிறகு காங்கிரஸ் கட்சித் தலைவர்களுடன், செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, பொதுத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம். ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் கட்சிக்கு 12 கோடியே 13 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.
பொதுத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற தோல்விக்கு பொறுப்பேற்று, கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் அளித்த ரஜினாமா கடிதத்தை செயற்குழுக் கூட்டம் நிராகரித்துள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தியின் தலைமை தொடர்ந்து தேவைப்படுகிறது. மத்தியில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தொடர்ந்து செயல்படுவோம்.
காங்கிரஸ் கட்சி நாட்டுக்காக தொடர்ந்து பாடுபட உறுதி பூண்டுள்ளோம். தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி என்று ரன்தீப் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.