தில்லி விமான நிலையத்தில், ரூ.32 லட்சம் மதிப்புள்ள ஹார்மோன் வளர்ச்சி மருந்துகளை இந்தியாவுக்குள் கடத்த முயற்சி மேற்கொண்டதாக ரஷியாவைச் சேர்ந்த பெண் பயணியை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
இதுகுறித்து சுங்கத் துறையினர் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது: ஹாங்காங்கில் இருந்து வியாழக்கிழமை தில்லி வந்த விமானத்தில் பயணித்த ரஷியப் பெண்ணின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரது உடைமைகள் சோதனையிடப்பட்டது. அதில் ஹார்மோன் வளர்ச்சியை தூண்டக் கூடிய மருந்துகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. சந்தையில் அதன் மதிப்பு ரூ.32.16 லட்சமாகும்.
அந்த மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், அவர் இந்தியாவைச் சேர்ந்தவரை திருமணம் செய்திருப்பதும், தம்பதி இருவரும் ஹரியாணா மாநிலத்தின் குருகிராம் உள்ளிட்ட பல இடங்களில் உடற்பயிற்சிக் கூடங்கள் நடத்தி வந்ததும் தெரியவந்தது.
தங்களது உடற்பயிற்சிக் கூடத்திற்கு வரும் வாடிக்கையாளர்களிடம் சட்டவிரோதமாக இந்த ஹார்மோன் வளர்ச்சி மருந்துகளை விற்பதற்காக ரஷிய பெண் அதை கடத்தி வந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது என்று சுங்கத் துறையினர் தெரிவித்தனர்.