நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகளின் மூலம் வாரிசு அரசியல், ஜாதியவாதம், ஒரு தரப்பினரை திருப்திப்படுத்தும் அரசியல் ஆகிய பிணிகளில் இருந்து நாட்டுக்கு விடுதலை கிடைத்துள்ளது என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.
மேலும், இந்த தேர்தலில் "மோடி சுனாமி'யால் பாஜக மாபெரும் வெற்றி பெற்றதாக அவர் பெருமிதத்துடன் கூறினார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களின் கூட்டம், தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மீண்டும் பிரதமராக மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இக்கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:
கடந்த 1960-களில் இருந்து, வாரிசு அரசியல், ஜாதியவாதம், ஒரு தரப்பினரை திருப்திப்படுத்தும் அரசியல் ஆகியவை நோய்களாக நமது நாட்டை பீடித்திருந்தன. ஆனால், 2019 மக்களவைத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பின் மூலம் அந்த நோய்களில் இருந்து நாடு விடுதலை அடைந்துள்ளது. ஏழை மக்களின் நலனை உறுதி செய்வதற்காக, மோடி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். உலக அளவில் இந்தியா சக்திவாய்ந்த நாடாக உருவெடுக்க வேண்டும் என்று நாட்டு மக்கள் விரும்புகின்றனர். அது, மோடியால் மட்டுமே முடியும் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். அவர் மீதான நம்பிக்கையை மக்கள் பெருமளவில் வெளிப்படுத்தியுள்ளனர். முந்தைய காங்கிரஸ் ஆட்சிகளின்போது, பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற வருத்தம் மக்கள் மத்தியில் நிலவி வந்தது. ஆனால், மோடியின் ஆட்சியில் நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதல்கள், மக்களுக்கு நம்பிக்கையை அளித்தது என்றார் அமித் ஷா.