2014 மக்களவைத் தேர்தலை விட காங்கிரஸ் கட்சி இம்முறை மோசமான தோல்வியை சந்தித்துள்ளதாக சிவ சேனை கட்சி விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ சாம்னா பத்திரிகை திங்கள்கிழமை வெளியிட்ட செய்தியில்,
2014-ஐ விட 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது. மக்களைக் கவரும் வகையில் ராகுலின் செயல்பாடுகள் இடம்பெறவில்லை. குறிப்பாக தேர்தல் பிரசாரங்களில் மேடைப் பேச்சும் மக்களிடம் எடுபடவில்லை. மக்கள் விரும்பும் முகமாக ராகுல் இல்லை.
அதிலும் குறிப்பாக 2014 மக்களவைத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி உத்தரப் பிரதேசத்தில் 2 இடங்களைக் கைப்பற்றியிருந்தது. ஆனால் இம்முறை ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் தான் அதிகம், தொண்டர்கள் இல்லை என்று விமர்சித்திருந்தது.
உத்தரப் பிரதேசத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் ராகுலின் சகோதரி பிரியங்கா வதேரா, இம்முறை அம்மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்தார். ஆனால், சொந்த தொகுதியான ரே பரேலியில் அவரது தாயார் சோனியா மட்டுமே வெற்றி பெற்றார். அமேதியில் ராகுல் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.