சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்புக்குத் தயார் என்று மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் இன்று (திங்கள்கிழமை) தெரிவித்தார்.
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்து 5 மாதங்களே ஆகியுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் கோபால் பார்கவா சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்குமாறு அம்மாநில ஆனந்தி பென்னிடம் கடந்த 20-ஆம் தேதி கோரிக்கை விடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து, நம்பிக்கை வாக்கெடுப்புக்குத் தயார் என்று கமல்நாத் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்புக்குத் தயார் என்று கமல்நாத் மீண்டும் தெரிவித்தார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய கமல்நாத்,
"எனது அரசுக்கு எந்தவித அச்சுறுத்தலும் கிடையாது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கட்டும். நாங்கள் அதற்குத் தயாராகத்தான் இருக்கிறோம்" என்றார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள 230 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து, இரண்டு பகுஜன் சமாஜ் எம்எல்ஏ-க்கள், ஒரு சமாஜ்வாதி எம்எல்ஏ மற்றும் 4 சுயேச்சை எம்எல்ஏ-க்கள் ஆதரவுடன் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. பாஜக 109 இடங்களில் வெற்றி பெற்றது.