பகுஜன் சமாஜ் எம்பி அதுல் ராயை கைது செய்ய தடை விதிக்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் இன்று (திங்கள்கிழமை) தள்ளுபடி செய்தது.
அதுல் ராய், உத்தரப் பிரதேச மாநிலம் கோசி மக்களவைத் தொகுதியின் பகுஜன் சமாஜ் சார்பில் போட்டியிட்டார். இந்த நிலையில், வாராணசியில் கல்லூரிப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக அதுல் ராய் மீது மே 1-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, அவர் தேர்தலைக் காரணம் காட்டி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால், உயர்நீதிமன்றம் அவரது மனுவை நிராகரித்தது. அதன்பிறகு, அவர் தலைமறைவானதாக தகவல்கள் வெளியானது. இதைத்தொடர்ந்து, தன்னை கைது செய்வதற்கு தடை கோரியும், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரியும் அதுல் ராய் உச்சநீதிமன்றத்தை நாடினார்.
இதனிடையே, அதுல் ராய் கோசி மக்களவைத் தொகுதியில் வெற்றியும் பெற்றார்.
இந்த நிலையில், அதுல் ராய் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி அனிருதா போஸ் ஆகியோர் அடங்கிய விடுமுறைக் கால அமர்வில் இன்று (திங்கள்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரருக்கு (அதுல் ராய்) எதிராக நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் குறித்து அவரது வழக்குரைஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் மீது 16 குற்ற வழக்குகள் உள்ளதாகவும், அனைத்து வழக்குகளிலும் அவர் பிணையில் இருப்பதாகவும் தெரிவித்தார். இதைக் கேட்ட நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தனர்.
இதன்மூலம், இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.