மக்களைவை தேர்தல் முடிவுகளால் ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சிக்கு பாதிப்பு எதுவும் இல்லை என அக்கட்சியின் தலைவர் அஜித் சிங்கின் மகன் ஜெயந்த் சௌதரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விடியோவில் தெரிவித்துள்ளதாவது: மக்களவைத் தேர்தலில் பாஜக மிக பெரிய வெற்றியை பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கும், எம்.பி.க்களுக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துகள். தேசத்தின் வளர்ச்சியை கட்டமைப்பதில் நாங்கள் எங்களது பங்களிப்பை தொடர்ந்து வழங்குவோம்.
இந்த தேர்தலில் வெற்றி பெற மகா கூட்டணி கடுமையாக பாடுபட்டது. அதற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சியின் இளம் தொண்டர்களுக்கு நான் சொல்வதெல்லாம், எவர் ஒருவர் தோல்வியின் சுவையை உணரவில்லையோ அவர் உண்மையான வாழ்க்கையை வாழவில்லை என்பதே எனது கருத்தாகும். வாழ்வின் ஒவ்வொரு திருப்பு முனையும் சுய முன்னேற்றத்துக்கான வழியாகும்.
எனவே, மக்களவை தேர்தல் முடிவுகளால் கட்சிக்கு பாதிப்பு எதுவும் இல்லை. விவசாயிகளின் உரிமைக்காக ராஷ்டிரிய லோக் தளம் தொடர்ந்து உறுதியான குரல் கொடுக்கும் என்று அந்த விடியோவில் ஜெயந்த் சௌதரி தெரிவித்துள்ளார்.