வாராணசி மக்களவைத் தொகுதி எம்.பி.யான பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 5 ஆண்டுகளில் காசியை மாற்றிக் காட்டியுள்ளார் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கூறினார்.
உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் திங்கள்கிழமை சென்றனர். அங்கு காசி விஸ்வநாதர் கோயிலில் வழிபட்ட அவர்கள் பின்னர் வாராணசியில் பாஜக தொண்டர்களிடையே உரையாற்றினர்.
அப்போது அமித் ஷா பேசியதாவது: நரேந்திர மோடிக்கு அளித்த ஆதரவுக்காகவும், அவரை மீண்டும் வாராணசி தொகுதியின் எம்.பி.யாக தேர்ந்தெடுத்ததற்காகவும் வாராணசி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதேவேளையில், மோடியைப் போன்ற ஒருவர் மக்களவை உறுப்பினராக இருப்பது வாராணசி மக்களின் அதிருஷ்டமாகும்.
மோடி தனது வேட்புமனுவை தாக்கல் செய்யவந்தபோது, இங்குள்ள கட்சித் தொண்டர்களும், மக்களும் அவருக்கு அளித்த ஆதரவை பார்த்தபோதே மோடி மீண்டும் வெற்றி பெறுவார் என்று நான் முடிவு செய்துவிட்டேன். வாராணசி தொகுதியில் போட்டியிட்ட மோடி தனது வேட்புமனுவை தாக்கல் செய்த பிறகு, இந்தத் தொகுதிக்கு மீண்டும் வரவில்லை.
ஏனெனில், அவர் தனது வாக்காளர்கள் மீது அவ்வளவு நம்பிக்கை கொண்டிருந்தார். இந்தத் தேர்தலில் வேறு எந்தத் தொகுதியிலும் இதுபோல நிகழவில்லை என்று அமித் ஷா பேசினார்.