ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அனந்த்நாக் மாவட்டத்தின் கச்வான் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் மறைந்திருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து அந்த பகுதியை சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதற்கு பதிலடி தரும் வகையில், பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தினர். அதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிரிழந்த பயங்கரவாதிகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.