ராகுல் பிடிவாதம் தொடர்கிறது: சமாதானப்படுத்த மூத்த தலைவர்கள் முயற்சி

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவில் பிடிவாதமாக உள்ள ராகுல் காந்தியை சமாதானப்படுத்தும் முயற்சியில் கட்சியின் மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ராகுல் பிடிவாதம் தொடர்கிறது: சமாதானப்படுத்த மூத்த தலைவர்கள் முயற்சி


காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவில் பிடிவாதமாக உள்ள ராகுல் காந்தியை சமாதானப்படுத்தும் முயற்சியில் கட்சியின் மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். ராகுலை, அவரது சகோதரி பிரியங்கா, கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர்.
கட்சி அலுவல்கள் மற்றும் நிர்வாகிகளுடனான சந்திப்பை கடந்த திங்கள்கிழமை முழுமையாக தவிர்த்த ராகுல், மூத்த தலைவர்களையும், காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்து நிலவும் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோரையும் செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.
பதவி விலக பிடிவாதம்: நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. 52 இடங்களில் மட்டுமே அக்கட்சியால் வெற்றி பெற முடிந்தது. இந்த தோல்விக்கான காரணங்கள் குறித்து விவாதிப்பதற்காக கட்சியின் செயற்குழு கூட்டம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதாக ராகுல் அறிவித்தார். ஆனால்,  அவரது முடிவை காங்கிரஸ் செயற்குழு ஒருமனதாக நிராகரித்து விட்டது. மேலும், கட்சியை மறுசீரமைக்க ராகுலுக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எனினும், தனது ராஜிநாமா முடிவில் ராகுல் காந்தி தொடர்ந்து பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தனது குடும்பத்தை சாராத நபரை பரிசீலிக்கும்படி அவர் கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
மூத்த தலைவர்கள் சந்திப்பு: இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா ஆகியோர், ராகுலை அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர். பின்னர், ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோர் ராகுலை தனித்தனியாக சந்தித்தனர். இச்சந்திப்புகளின் போது பிரியங்காவும் உடனிருந்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக, செயற்குழு கூட்டத்தின்போது, அசோக் கெலாட் மீது ராகுல் கடும் அதிருப்தி வெளியிட்டிருந்தார்.  தனது மகன் வைபவ் போட்டியிட்ட ஜோத்பூர் தொகுதியில்தான் அசோக் கெலாட் அதிக நாள்கள் பிரசாரம் செய்தார் என்று ராகுல் குற்றம்சாட்டியதாக அக்கூட்டத்தில் பங்கேற்ற சில தலைவர்கள் தெரிவித்திருந்தனர். இந்தச் சூழலில், ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் தோல்வி அடைந்ததையடுத்து, அந்த மாநிலத்தில் அக்கட்சியின் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ராகுலை சந்திக்க அசோக் கெலாட் திங்கள்கிழமை முயன்றார். ஆனால், ராகுல் அவரை சந்திக்கவில்லை.
இந்நிலையில், அசோக் கெலாட்டையும், துணை முதல்வர் சச்சின் பைலட்டையும் ராகுல் செவ்வாய்க்கிழமை சந்தித்துள்ளார். 
பதவி விலகும் முடிவை கைவிட வேண்டும்: ராகுலை செவ்வாய்க்கிழமை சந்தித்த பின்னர், காங்கிரஸ் மூத்த தலைவர் பிரமோத் திவாரி கூறுகையில், காங்கிரஸில் அதிகாரமிக்க செயற்குழு, ராகுலின் முடிவை நிராகரித்துவிட்டது. எனவே, அவர் ராஜிநாமா செய்வதற்கு பதிலாக, அனைத்து நிலைகளிலும் உள்ள தலைவர்களிடம் ராஜிநாமா கடிதங்களைப் பெற்று, கட்சியை அவர் அமைப்புரீதியாக சீரமைக்க வேண்டும் என்றார்.
காங்கிரஸ் கட்சியின் மற்றொரு மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கூறுகையில், தேர்தல் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு, காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியாது. காங்கிரஸ் குடும்பத்தை வழிநடத்துவதற்கு ராகுலே தகுதியான நபர் என்றார்.
தற்கொலைக்கு சமமானது: காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகும் ராகுல் காந்தியின் முடிவு தற்கொலைக்கு சமமானது என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் கூறியுள்ளார். அவரது அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை இந்த கருத்து வெளியிடப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com