முதல் முறையாக முதல்வரான ஜெகன்மோகன் ரெட்டியின் முக்கிய அறிவிப்புகள்

ஆந்திர மாநிலத்தின் முதல்வராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று பதவியேற்றுக் கொண்டார்.
முதல் முறையாக முதல்வரான ஜெகன்மோகன் ரெட்டியின் முக்கிய அறிவிப்புகள்


விஜயவாடா: ஆந்திர மாநிலத்தின் முதல்வராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று பதவியேற்றுக் கொண்டார்.

விஜயவாடாவில் இன்று நண்பகலில் நடைபெற்ற பிரம்மாண்ட பதவியேற்பு விழாவில், முதல் முறையாக ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றுக் கொண்டார்.

பதவியேற்பு விழாவுக்கு பிறகு ஆந்திர முதல்வராக மாநில மக்களுக்கு தனது உரையை ஆற்றினார் ஜெகன்மோகன் ரெட்டி.

அப்போது பல நலத்திட்டங்களையும் அவர் அறிவித்தார்.  அதில் முதல் விஷயம், ஆந்திர மாநிலத்தில் வாழும் வயதானவர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை வரும் ஆண்டு முதல் ரூ.2500 ஆக உயர்த்துவதாக அறிவித்து அந்த நலத்திட்டத்தில் தனது முதல் கையெழுத்தை இட்டார். மேலும், ஒவ்வொரு ஆண்டும் ரூ.250 ஓய்வூதித் தொகை உயர்த்தப்படும் என்றும், அதிகபட்சமாக ரூ.3000 வரை ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

மேலும், ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் வீடு வீடாகச் சென்று அரசு சேவைகளை அணிக்கும் திட்டத்துக்காக கிராம சமூக ஆர்வலர்கள் சேவை மூலம் 4 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.

ஒரு கிராமத்தில் இருக்கும் 50 வீடுகளுக்கு ஒருகிராம சேவகர் என்ற அடிப்படையில் நியமிக்கப்பட்டு, அவர்கள் சேவைக்கு மாதம் ரூ.5000 ஊதியம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

மேலும் அவர் வெளியிட்டசில அறிவிப்புகள்..

ஊழல், சேவைகள் பெறுவதில் சிக்கல் என எந்த பிரச்னை குறித்தும் பொதுமக்கள் புகார் கூற முதல்வர் அலுவலகத்தில் கால் சென்டர் அமைக்கப்படும். 

கிராமங்களை ஒன்றிணைத்து கிராம தலைமைச் செயலகம் அமைக்கப்படும். இந்த கிராம தலைமைச் செயலகத்தில் அந்தந்த கிராமத்தைச் சேர்ந்த 10 பேருக்கு பணி வழங்கப்படும்.

எந்த புகார்களும், குறைகளும் 72 மணி நேரத்தில் சரிசெய்து தரப்படும்.

அரசு சலுகைகளைப் பெற லஞ்சமோ, சிபாரிசோ தேவையில்லை என்றும் ஜெகன்மோகன் கூறினார்.

அரசு நிர்வாகத்தை உச்சி முதல் பாதம் வரை இந்த கொள்கைகளின் அடிப்படையில் 6 மாதம் முதல் ஒரு வருட காலத்துக்குள் மாற்றிவிடுவதாகவும் நம்பிக்கை அளித்துள்ளார்.

ஊழல் அல்லது முறையற்ற டெண்டர்கள் ரத்து செய்யப்படும்.

கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட முறையற்ற டெண்டர்களும் மாற்றியமைக்கப்படும்.

காற்றாலைகள் மூலம் வரும் மின்சாரத்துக்கு ஆந்திராவில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இனி மின் கட்டணம் குறைக்கப்படும் என்பது உள்ளிட்ட பல அறிவிப்புகளை வெளியிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com