சாரதா நிதி நிறுவன மோசடி: ஐபிஎஸ் அதிகாரியிடம் சிபிஐ விசாரணை

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக, காவல்துறை அதிகாரி அர்னாப் கோஷிடம் சிபிஐ புதன்கிழமை விசாரணை நடத்தியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக, காவல்துறை அதிகாரி அர்னாப் கோஷிடம் சிபிஐ புதன்கிழமை விசாரணை நடத்தியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
சாரதா மோசடி வழக்கை விசாரித்த சிறப்பு விசாரணைக் குழுவில் அர்னாப் கோஷும் அங்கம் வகித்த நிலையில், வழக்கு தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்பட்டது தொடர்பாக சிபிஐ அவரிடம் விசாரணை நடத்தியது. 
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு புதன்கிழமை காலை 10 மணியளவில் வந்த அர்னாப் கோஷிடம் சிபிஐ அதிகாரிகள், மாலை வரையில் சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர். தொடர் விசாரணைக்காக வியாழக்கிழமையும் ஆஜராகுமாறு அர்னாப் கோஷுக்கு சிபிஐ அறிவுறுத்தியது என்றன. 
முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழுவில் அங்கம் வகித்த மற்றொரு காவல்துறை அதிகாரியான பிரபாகர் நாத்திடம் சிபிஐ செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தியிருந்தது. அவர், அர்னாப் கோஷின் உதவி அதிகாரியாகச் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. 
இந்த வழக்கில், சிறப்பு விசாரணைக் குழுவின் தலைவராகச் செயல்பட்ட கொல்கத்தா காவல்துறை முன்னாள் ஆணையர் ராஜீவ் குமாருக்கும் சிபிஐ அழைப்பாணை அனுப்பியுள்ளது. எனினும், அவற்றுக்கு அவர் பதிலளிக்கவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com