ஆந்திர சட்டப்பேரவைக்கான தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) எம்எல்ஏக்கள் குழுவின் தலைவராக அக்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தெலுங்கு தேசம் கட்சி புதிய எம்எல்ஏக்கள் கூட்டம், சந்திரபாபு நாயுடுவின் இல்லத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் 23 எம்எல்ஏக்கள், 3 எம்.பி.க்கள், மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் எம்எல்ஏக்கள் குழுத் தலைவராக சந்திரபாபு நாயுடு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக குண்டூர் தொகுதி எம்.பி. கல்லா ஜெயதேவை சந்திரபாபு நாயுடு நியமித்தார். மக்களவை எம்.பி.க்கள் குழுத் தலைவராக கிஞ்சரப்பா ராம் மோகன் நாயுடு, மாநிலங்களவை எம்.பி.க்கள் குழுத் தலைவராக சத்யநாராயாண சௌதரி ஆகியோரை சந்திரபாபு நாயுடு நியமித்தார். மக்களவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் 3 தொகுதிகளில் மட்டுமே வென்றது. இது கடந்த மக்களவைத் தேர்தலில் கிடைத்த இடங்களுடன் ஒப்பிடுகையில் 12 குறைவாகும். மாநிலங்களவையில் தெலுங்கு தேசம் கட்சிக்கு 6 எம்.பி.க்கள் உள்ளனர். அதில் 5 பேர், ஆந்திரத்தில் இருந்தும், ஒருவர் தெலங்கானாவில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டவர்கள்.