தெலங்கானாவில் அக். 29-ஆம் தேதி நடைபெற்ற திருமணம் ஒன்றில், சடங்கில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக மணமகன் மற்றும் மணப்பெரண் வீட்டாருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு வீட்டாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இதில் ஒருவரை ஒருவர் அங்கிருந்த நாற்காலிகளைப் பயன்படுத்தி பலமாகத் தாக்கிக்கொண்டனர். இதில் 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக கோடட் பகுதி போலீஸ் அதிகாரி ஷிவ ராம் ரெட்டி கூறுகையில்,
தெலங்கானாவின் சூர்யபேட் மாவட்டத்தைச் சேர்ந்த அஜய் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த இந்திரஜா ஆகியோரின் திருமணத்தின் போது, இருவீட்டாருக்கும் இடையே திருமணச் சடங்கில் தகராறு ஏற்பட்டது. இது பின்னர் சண்டையில் முடிந்தது. இதுதொடர்பாக தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்த 3 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தோம்.
ஆனால், நவம்பர் 1-ஆம் தேதி காவல்நிலையத்துக்கு வந்த இருவீட்டாரும், மணமகன் மற்றும் மணப்பெண் ஆகியோருக்கு இடையே எந்தப் பிரச்னையும் இல்லை. அவர்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் திருமண வாழ்க்கையை முன்னெடுக்க நினைப்பதால் புகார் அளிக்க விரும்பவில்லை என்று கூறியதாக தெரிவித்தார்.