சந்திரயான்-2 திட்டத்தின் மூலம் நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் நிச்சயம் தரையிறக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் கே. சிவன் தெரிவித்துள்ளார்.
ஐஐடி தில்லியின் 50-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க இஸ்ரோ தலைவர் கே. சிவன் தில்லி சென்றுள்ளார். அங்கு, நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டரை தரையிறக்க இஸ்ரோ மீண்டும் முயற்சி செய்யுமா என்று ஊடகங்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர்,
"நிச்சயமாக. விக்ரம் லேண்டரை தரையிறக்குவதற்கான தொழில்நுட்பத்தை செயல்முறையில் செய்து பார்க்க வேண்டும். நாங்கள் விக்ரம் லேண்டரை தரையிறக்குவது தொடர்பான திட்டத்தில் பணியாற்றி வருகிறோம்" என்றார்.
முன்னதாக:
பூமியின் ஒரே துணைக்கோளான நிலவின் தென்துருவப் பகுதியை ஆராயும் நோக்கில் சந்திரயான்-2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) கடந்த ஜூலை மாதம் 22-ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. பின்னர், நிலவைச் சுற்றி வந்து ஆய்வு செய்யும் ஆர்பிட்டர் பகுதி, விண்கலத்திலிருந்து பிரித்து விடப்பட்டது.
நிலவில் தரையிறங்கி ஆராய்ச்சி செய்வதற்காக, ஆர்பிட்டரிலிருந்து கடந்த மாதம் 7-ஆம் தேதி பிரித்து விடப்பட்ட விக்ரம் லேண்டர், நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க 2.1 கி.மீ. தொலைவே இருந்த நிலையில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.
கட்டுப்படுத்த இயலாத நிலையில் நிலவின் தரைப்பகுதியில் விக்ரம் லேண்டர் விழுந்தது. அதனுடனான தொடர்பை மீட்டெடுக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் பெரும் முயற்சியில் ஈடுபட்டனர். இருந்தபோதிலும், அவர்களின் முயற்சி பலனளிக்கவில்லை. லேண்டருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து ஆராய குழு ஒன்றை இஸ்ரோ அமைத்துள்ளது.