உடல்நிலை சரியில்லாத தனக்கு மருத்துவ சிகிச்சைக்காக ஜாமீன் அளிக்காவிட்டால் இறந்து விடுவேன் என்று இந்திராணி முகர்ஜி தனது ஜாமீன் மனுவில் தெரிவித்துள்ளார்.
மும்பையைச் சேர்ந்த இந்திராணி முகர்ஜி, தனது மகள் ஷீனா போரா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மும்பை சிறையில் நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் மருத்துவ சிகிச்சைக்காக ஜாமீன் கோரி மனு அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள மனுவில், '50 மாதங்களுக்கும் மேலாக நான் சிறையில் இருக்கிறேன். நான் வாழ்வதற்கு விரும்பினாலும், சிலர் எனக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் முயற்சி செய்து வருகிறார்கள். நான் குற்றவாளியா இல்லையா என்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே அவர்கள் எனக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பது குறித்து யோசிக்க வேண்டும். ஆனால், உண்மையில் நான் குற்றவாளி இல்லை.
விசாரணை தொடங்கியதில் இருந்தே போலீசாரும், சிபிஐயும், என்னை கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர். எனது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஏற்கனவே எனது மூளையில் பாதி செயல் இழந்துவிட்டது. எனவே, உடனடியாக எனக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இல்லையெனில் நான் இறந்து விடுவேன்' என்று தெரிவித்துள்ளார். மேலும், நீதிமன்றத்தில் தனக்காக வாதாடியுள்ளார். தொடர்ந்து, வழக்கின் விசாரணை நவம்பர் 8ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, மூன்று முறை ஜாமீன் கோரி இந்திராணி முகர்ஜிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.