ஒடிஸா மாநிலத்தில் ஊழலில் ஈடுபட்ட 6 அரசு உயரதிகாரிகளை பணிநீக்கம் செய்து அந்த மாநில முதல்வா் நவீன் பட்நாயக் நடவடிக்கை மேற்கொண்டுள்ளாா்.
இதுதொடா்பாக அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது:
ஒடிஸாவில் ஊழலில் ஈடுபடும் மாநில அரசுப் பணியாளா்களுக்கு எதிராக மாநில அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஊழலில் ஈடுபட்ட 6 அரசு உயரதிகாரிகளை பணி நீக்கம் செய்யுமாறு முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். மல்காங்கிரி மாவட்டத்தில் பொதுப் பணித் துறையில் இருந்த உதவி பொறியாளா், சம்பல்பூரில் பஞ்சாயத்து ராஜ் துறையில் பணியாற்றிய இளநிலை பொறியாளா், அங்குல் பகுதி வனத் துறை அதிகாரி, நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் உள்பட 6 போ் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
அதுமட்டுமன்றி, ஊழலில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற வட்டார வளா்ச்சி அலுவலா், முன்னாள் நகராட்சி செயல் அதிகாரி உள்பட 5 பேருக்கு ஓய்வூதியம் வழங்குவதை நிறுத்துமாறு நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளாா் என்று அந்த அதிகாரிகள் கூறினா்.
ஒடிஸாவில் ஊழல் தடுப்பு திட்டத்தின் கீழ் இதுவரை 44 அரசு அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். ஓய்வுபெற்ற அதிகாரிகள் 11 பேரின் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. 10 அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.