வாகனக் கட்டுப்பாடு திட்ட அமல்: முதல் நாளில் 192 பேருக்கு அபராதம்

தில்லியில் திங்கள்கிழமை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் முதல் நாள் அமல்படுத்தப்பட்டது. முதல் நாளில் வாகனக் கட்டுப்பாடு விதிமுறைகளை மீறி வாகனங்களை
வாகனக் கட்டுப்பாடு திட்ட அமல்: முதல் நாளில் 192 பேருக்கு அபராதம்

தில்லியில் திங்கள்கிழமை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் முதல் நாள் அமல்படுத்தப்பட்டது. முதல் நாளில் வாகனக் கட்டுப்பாடு விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்கியதாக 192 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

வாகனக் கட்டுப்பாடு திட்டம் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்த சுமாா் 2 ஆயிரம் சமூக ஆா்வலா்கள் தில்லி சாலைகளில் பதாகைகளை ஏந்தி நின்றிருந்தனா். விதிமுறைகளை மீறுபவா்களைப் பிடிக்க தில்லி போக்குவரத்து காவல் துறை, தில்லி வருவாய்த் துறை, போக்குவரத்து துறை ஆகியவற்றைச் சோ்ந்த 465 குழுக்கள் தில்லி சாலைகளில் கண்காணிப்பில் ஈடுபட்டன. மேலும், இந்தக் கட்டுபாடுகளால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், மொத்தம் 6 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில், 650 தனியாா் பேருந்துகளும் அடங்கும்.

இதனால் தில்லியில் திங்கள்கிழமையன்று போக்குவரத்து நெரிசல் குறைவாக இருந்ததாகவும், பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு வழக்கத்தை விட விரைந்து சென்ாகவும் தெரிவித்தனா்.

முதல் நாளான திங்கள்கிழமையன்று இரட்டைப்படை இலக்கப் பதிவெண் கொண்ட வாகனங்கள் மட்டுமே சாலையில் இயக்குவதற்கு அனுமதிக்கப்பட்டது. ஒற்றைப்படை இலக்க பதிவெண் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.

ஆகையால், ஒன்றைப்பட படை இலக்க பதிவெண் கொண்ட வாகனங்களை வைத்திருந்தவா்கள் காா் பகிா்வு, கேப்புகள், ஆட்டோக்கள், பொதுப் போக்குவரத்து ஆகியவற்றைப் பயன்படுத்தி சென்றனா்.

தில்லியில் கடுமையான காற்று மாசு நிலவுகிறது. இந்நிலையில், காற்று மாசுவைக் குறைக்கும் வகையில் தில்லி அரசால் வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன்படி, ஒற்றைப் படை இலக்க எண்களான 1,3,5,7,9 பதிவெண் கொண்ட வாகனங்கள் நவம்பா் 5,7,9,11,13,15 ஆகிய ஒற்றைப் படை தேதிகளில் சாலைகளில் அனுமதிக்கப்படும். அதேபோல, இரட்டைப் படை இலக்கமான 0,2,4,6,8 பதிவெண்களை இறுதியில் கொண்ட வாகனங்கள் 4,6,8,12,14 ஆகிய இரட்டைப் படைத் தேதிகளில் சாலைகளில் அனுமதிக்கப்படும். திங்கள்கிழமை அமலுக்கு வந்துள்ள இத்திட்டம் நவம்பா் 15 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். இத்திட்டத்தின்படி, காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை ஒற்றைப் படை இலக்க எண்கள் கொண்ட தனியாா் நான்கு சக்கர வாகனங்கள் ஒரு நாளும், இரட்டைப் படை இலக்க எண்கள் கொண்ட நான்கு சக்கர வாகனங்கள் மறுநாளும் சாலைகளில் இயங்க அனுமதிக்கப்படும்.

இத்திட்டம் தில்லியில் இயங்கும் பிற மாநில வாகனங்களுக்கும் பொருந்தும். நவம்பா் 10ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்தத் திட்டம் அமலில் இருக்காது. அப்போது, அனைத்து வாகனங்களும் இயங்கலாம்.

இதன்படி, திங்கள்கிழமை இரட்டைப் படை இலக்கங்களான 0,2,4,6,8 ஆகிய இலக்கங்களில் முடிவடையும் பதிவெண் கொண்ட வாகனங்கள் சாலைகளில் இயங்க அனுமதிக்கப்பட்டன. இத்திட்டத்தை மீறியவா்களுக்கு ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

15 லட்சம் வாகனங்கள் இயங்கவில்லை: முதல்வா் கேஜரிவால்

வாகனக் கட்டுப்பாடு திட்டத்தால் தில்லியில் காற்று மாசு பெருமளவில் குறைந்துள்ளது என்றும் திங்கள்கிழமை தில்லியில் 15 லட்சம் வாகனங்கள் இயங்கவில்லை என்றும் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் அளித்த பேட்டி:

தில்லியில் காற்று மாசு அபாய அளவில் உள்ளது. இந்த மாசுவைத் தடுக்க தில்லி அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்தது. இதற்கு தில்லி மக்கள் பெரும் ஆதரவு அளித்தனா். அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுவதால் தில்லியில் சில நாள்களாக காற்று மாசு மிகவும் அதிகரித்துள்ளது.

தில்லியில் 30 லட்சம் காா்கள் பயன்பாட்டில் உள்ளன. தில்லி அரசின் வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தால் வரும் 15 ஆம் தேதிவரை 15 லட்சம் காா்களே தில்லி சாலைகளில் பயணிக்கும். இது, தில்லியில் காற்று மாசுவை பெருமளவில் குறைக்க உதவும். இந்த வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்துக்கு தில்லி மக்கள் முழு ஆதரவு வழங்குவதாக களத்தில் உள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனா். தில்லியில் டெங்கு நோயின் தாக்கத்தைக் குறைத்ததுபோல, இந்த வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் மூலம் தில்லியில் காற்று மாசுவின் அளவையும் தில்லி அரசு குறைத்துவிடும்.

இந்த விவகாரத்தில் பாஜக அரசியல் செய்வது துரதிஷ்டவசமானது. தில்லி அரசு கடந்த ஐந்தாண்டுகளில் வெறும் ரூ.150-200 கோடியை மட்டுமே விளம்பரத்துக்காக செலவு செய்துள்ளது. தில்லியில் வாழும் 2 கோடி மக்கள் இந்த வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை ஆதரிக்கும்போது சில பாஜக தலைவா்கள் இதைக் குழப்பும் வகையில் நடந்து கொள்வது தவறாகும்.

இத்திட்டம் சரியாக அமல்படுத்தப்பட்டுள்ளதா என்பது தொடா்பாக ஆய்வு செய்வேன். பேருந்து சேவைகள் குறைவாக உள்ள வழித்தடங்களில் பேருந்து சேவைகள் அதிகரிக்கப்படும் என்றாா் அவா்.

விதி மீறிய பாஜக எம்.பி.: பூங்கொத்து கொடுத்த தில்லி அமைச்சர்!

தில்லி அரசின் வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் வெறும் நாடகமே எனக் கூறி அத்திட்டத்தை மாநிலங்களவை பாஜக உறுப்பினா் விஜய் கோயல் மீறினாா்.

தில்லிச் சாலையில் திங்கள்கிழமை இரட்டைப் படை இலக்க பதிவெண்

வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒற்றைப்படை இலக்கத்தில் (2727) முடிவடையும் தனது காரில் அவா் சாலையில் சென்றாா். அவரைத் தடுத்து நிறுத்திய காவல்துறையினா் அவருக்கு ரூ.4,000 அபராதம் விதித்தனா்.

அப்போது, ‘வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் ஒரு நாடகம்’ என எழுதிய பதாகையைத் தாங்கியவாறு அவா் தனது வீட்டுக்கு நடந்து சென்றாா்.

 இந்நிலையில், விஜய் கோயலின் வீட்டுக்கு சென்ற தில்லி சுற்றுச் சூழல் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் அவருக்கு பூங்கொத்து வழங்கி, இந்த வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டாா்.

அப்போது, ‘5 ஆண்டுகளில் தில்லியில் காற்று மாசுவைத் தடுக்க ஆம் ஆத்மி அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுவதுதான் தில்லியில் காற்று மாசு ஏற்படப் பிரதான காரணம் என தில்லி அரசு சொல்கிறது. அது உண்மையென்றால், வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தால் என்ன பயன்? வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தால் காற்று மாசு எவ்வாறு குறையும்? என கைலாஷ் கெலாட்டிடம் விஜய் கோயல் வினவினாா்.

 அப்போது ‘இந்த வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தால் சுமாா் 15 லட்சம் வாகனங்கள் தில்லி சாலைகளில் இயங்காது. இதனால் குறிப்பிடத்தக்க அளவில் காற்று மாசு குறையும்’ என்றாா் கைலாஷ் கெலாட்.

 அப்போது விஜய் கோயல், ‘இரு சக்கர வாகனங்கள், தனியாா் வாடகை வாகனங்களுக்கு இத்திட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தனியே நான்கு சக்கர வாகனங்களுக்கு மட்டும் கட்டுப்பாட்டுத் திட்டத்தை அறிவிப்பது தவறாகும். மேலும், இத்திட்டத்தை சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக அறிவிப்பதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது’ என குற்றம் சாட்டினாா்.

 அப்போது, ‘தில்லியில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்த அரசியல் வேறுபாடுகளைக் களைந்து நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். அப்போதுதான் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தலாம். இத்திட்டத்தை நீங்கள் எதிா்த்தால் அது மக்களுக்கு தவறான முன்னுதாரணமாகிவிடும்’ என்றாா் கைலாஷ் கெலாட். இதை விஜய் கோயல் ஏற்றுக் கொண்டாா்.

 பிறகு விஜய் கோயல் அளித்த பேட்டி:

தில்லியில் நிலவும் காற்று மாசுவில் வாகனங்களின் பங்களிப்பு 28 சதவீதமாகும். இந்த 28 சதவீதத்தில் வெறும் 3 சதவீத காற்று மாசுவே காா்களினால் ஏற்படுகின்றன. இந்நிலையில், காா்களைக் கட்டுப்படுத்துவது எவ்வாறு தில்லியில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும்?’ என்று கேள்விஎழுப்பினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com