உத்தரப் பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர் 'நாகரீகமான' உடை அணிந்ததற்காக அவரது மூத்த சகோதரிகள் அவரை அடித்து இழுத்துச் சென்றதால், இளம்பெண் விஷம் குடித்தார்.
உத்தரப் பிரதேசத்தில் பிஜ்னோர் மாவட்டம் மலக்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த 21 வயது பெண் நந்தனி. இவருக்கு இரண்டு மூத்த சகோதரிகள் உள்ளனர். இவர்கள் தையல் வேலை செய்து வருகின்றனர். இதில் நந்தனிக்கு நவீன ஆடைகளை அணிவதில் விருப்பம் அதிகம். ஆனால், அவரது கிராமப் பகுதி இதனை கடுமையாக எதிர்ப்பவர்கள். இந்நிலையில் ஆசைக்காக அவர் ஒருமுறை நவீன உடைகளை அணிந்துள்ளார்.
இதைப்பார்த்த கிராம மக்கள், அவரது மூத்த சகோதரியிடம் சென்று முறையிட்டுள்ளனர். இதையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சகோதரிகள் இருவரும் நந்தனியை திட்டியதோடு, இழுத்துச் சென்று அடித்துள்ளனர். இதனால் கோபமடைந்த நந்தனி விஷத்தை அருந்தியுள்ளார். தற்போது நந்தனி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை; ஓரிரு நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு அறிவிக்கப்படவில்லை. எனவே இந்த வழக்கில் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.