புது தில்லி: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள லடாக் யூனியன் பிரதேசத்தில் பாஜக அலுவலகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. லே நகரில் உள்ள இந்த அலுவலகத்தை பாஜக பொதுச் செயலாளா் அருண் சிங் திறந்து வைத்தாா்.
இது தொடா்பாக பாஜக ஊடகப் பிரிவு துணைத் தலைவா் சஞ்சய் மயங்க் கூறுகையில், ‘லடாக் யூனியன் பிரதேசத்துக்கான பாஜக தலைமையகம் திறக்கப்பட்டுள்ளது. லே, காா்கில் மாவட்ட கட்சிப் பணிகள் இந்த அலுவலகம் மூலம் மேற்கொள்ளப்படும். கட்சியின் பொதுச் செயலாளா் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து அலுவலகத்தை திறந்துவைத்தாா். லடாக் தொகுதி பாஜக எம்.பி. ஜாம்யாங் சேரிங் நமங்யால் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்’ என்றாா்.
ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் பிரித்தது. அந்த இரு யூனியன் பிரதேசங்களும் கடந்த மாத 31-ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்தன. இதன் மூலம் நாட்டிலுள்ள யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 9-ஆக உயா்ந்தது. அதே வேளையில், மாநிலங்களின் எண்ணிக்கை 28-ஆகக் குறைந்தது.