மும்பை: மகாராஷ்டிர மாநில முதல்வர் பதவியை பாஜகவின் தேவேந்திர ஃபட்னவீஸ் வெள்ளியன்று மாலை ராஜிநாமா செய்தார்.
மஹாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து இத்தனை நாட்களாகியும் ஆட்சியமைப்பதில் ஒரு முடிவு ஏற்படாமல் இழுபறி நீடிக்கிறது. கூட்டணிக் கட்சிகளான பாஜக மற்றும் சிவசேனை இடையே முதல்வர் பதவி தொடர்பாக தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவுகிறது. வரும் 9-ஆம் தேதியோடு அதற்கான அவகாசம் முடிவடைவதால் பாஜக ஏதாவது மாற்று வழிகளை கையாளும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதேசமயம் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரை மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வெள்ளியன்று சந்தித்துப் பேசினார். பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவரான அவர் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, 'மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்து பவாரிடம் ஆலோசனை கேட்டதாக' தெரிவித்தார்.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநில முதல்வர் பதவியை பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் வெள்ளியன்று மாலை ராஜிநாமா செய்தார்.
மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை, ஆளுநர் மாளிகையில் சந்தித்த அவர் தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தார்.
மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் ஆயுட்காலம் வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையும் நிலையில் அவர் தனது ராஜிநாமா கடிதத்தை அளித்துள்ளார்.
இதையடுத்து அங்கு என்ன விதமான முடிவை எடுப்பது என்பது குறித்து ஆளுநர் தீர்மானிப்பார் என்று தெரிகிறது.