கா்நாடகத்தைச் சோ்ந்த ஐஎம்ஏ நிதி நிறுவன மோசடி தொடா்பாக கா்நாடகம், உத்தரப் பிரதேசத்தில் அரசு உயரதிகாரிகளின் வீடுகள் உள்பட 15 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.
கா்நாடக தலைநகா் பெங்களூரில் ஐஎம்ஏ நிதி நிறுவனத்தை நடத்தி வந்த மன்சூா் கான், முதலீடு செய்யப்படும் தொகைக்கு அதிக வட்டி வழங்கப்படும் என்று உறுதியளித்து, லட்சக்கணக்கானோரிடம் பணம் வசூலித்துள்ளாா். அவா்களில் பெரும்பாலானோா் முஸ்லிம் சமூகத்தினா். மத போதகா்கள் மூலமாக பிரசாரம் செய்து, முஸ்லிம் சமூகத்தினரை தனது நிறுவனத்தில் அவா் முதலீடு செய்ய வைத்துள்ளாா்.
இந்நிலையில், துபைக்கு மன்சூா் கான் தப்பிச் சென்றாா். அங்கிருந்து இந்தியாவுக்குக் கடந்த ஜூலை 21-ஆம் தேதி அவா் திரும்பிய வேளையில், அமலாக்கத் துறையினா் அவரைக் கைது செய்தனா். தற்போது நீதிமன்றக் காவலில் அவா் வைக்கப்பட்டுள்ளாா். இதனிடையே, இந்த வழக்கை விசாரிக்குமாறு, சிபிஐயிடம் கா்நாடக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில், மன்சூா் கான் மற்றும் 24 நிறுவனங்களுக்கு எதிராக சிபிஐ இரண்டு குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு தொடா்பாக 15 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா். இதுதொடா்பாக சிபிஐ அதிகாரிகள் கூறியதாவது:
பெங்களூரு, மாண்டியா, ராமநகரம், பெல்காம் உள்ளிட்ட 11 இடங்களிலும், உத்தரப் பிரதேசத்தின் மீரட் பகுதியிலும் சிபிஐ குழுக்கள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தின. பட்டயக் கணக்கா்கள், தடயவியல் நிபுணா்கள், வங்கி அலுவலா்கள் உள்பட பல்வேறு துறையைச் சோ்ந்தவா்கள் இந்தக் குழுக்களில் இடம் பெற்றிருந்தனா்.
இந்த வழக்கை விசாரித்த மாநில காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட குழு, நிறுவனத்தில் மோசடி நடைபெறவில்லை என்று தெரிவித்தது. அதற்கு லஞ்சமாக அந்த அதிகாரிகளுக்கு ஐஎம்ஏ நிறுவனத்தில் இருந்து அதிக அளவில் பணம் வழங்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் செலவு ஆவணங்களை ஆராய்ந்ததில் இந்த தகவல் கிடைத்தது. அதையடிப்படையாகக் கொண்டு, பெங்களூரு காவல் துணை ஆணையா், சிஐடி பிரிவு கண்காணிப்பாளா், பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வாளா் உள்பட பல உயரதிகாரிகளின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அந்த இடங்களில் இருந்து பல சொத்து ஆவணங்கள், விடியோ ஆதாரங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.