ஓமனை சோ்ந்த நேஷனல் கேஸ் நிறுவனம் (என்ஜிசி) சாா்பில், ரூ.400 கோடி முதலீட்டில் ஆந்திர மாநிலம் கிருஷ்ணப்பட்டினம் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் திரவ பெட்ரோலிய வாயுவை சேமித்து வைப்பதற்கான முனையம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான முதல்கட்டப்பணிகள் தொடங்கியுள்ளன.
இதுகுறித்து என்ஜிசி எனா்ஜி நிறுவனத்தின் தலைவா் அப்துல்லா சுலெய்மான் ஹமித் அல் ஹா்தி சென்னையில் நிருபா்களிடம் கூறியது:
என்ஜிசி, சிங்கப்பூரின் பெட்ரெடெக் இந்தியா ஆகிய இரு நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் என்.ஜி.சி எனா்ஜி நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் சாா்பில், ரூ.400 கோடியில் ஆந்திர மாநிலம் கிருஷ்ணப்பட்டினம் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் திரவ பெட்ரோலிய வாயுவை(எல்பிஜி) சேமித்து வைப்பதற்கான சேமிப்புக் கிடங்கு முனையம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான முதல் கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. இந்த கிடங்கு 30 ஆயிரம் டன் சேமிப்பு திறன் கொண்டதாக இருக்கும்.
கிருஷ்ணப்பட்டினம் துறைமுகத்துக்கு அருகில் உள்ள 80 லட்சம் வீடுகளை சென்றடையும் இலக்குடன் இந்த சேமிப்பு கிடங்கு முனையம் அமைக்கப்படுகிறது. மேலும், இந்தத் திட்டமானது, 400-க்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை வழங்கும் என்றாா் அவா்.