அயோத்தி வழக்கில் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ட்வீட் செய்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியிலுள்ள 2.77 ஏக்கா் சா்ச்சைக்குரிய நிலத்தை உரிமை கோருவது தொடா்பான வழக்கின் மேல்முறையீட்டு மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு விசாரித்து வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு வழங்கப்பட உள்ளது.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'அயோத்தி வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வரப்போகிறது. இது உங்கள் அனைவருக்குமே தெரியும். இந்தத் தருணத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பு என்னவாக இருந்தாலும், அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். நாட்டின் ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர அன்பு ஆகிய ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடைபிடித்த நமது பழமையான பாரம்பரியத்தை தொடர வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. இது மகாத்மா காந்தி வாழ்ந்த நாடு. அமைதி மற்றும் அகிம்சையை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டியது நமது கடமையாகும்' என்று பதிவிட்டுள்ளார்.