புதுதில்லி: அயோத்தி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை மதிக்க வேண்டும் மற்றும் சமூக நல்லிணக்கத்தை பேண வேண்டும் முன்னாள் காங்கிரஸ் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி கூறியுள்ளார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்தது.
அதில், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம். முஸ்லிம்களுக்கு தனியாக 5 ஏக்கர் நிலத்தை உத்தரபிரதேச மாநில அரசு வழங்க வேண்டும். சர்ச்சைக்குரிய இடத்தை மத்திய அரசு கட்டுப்பாட்டில் வைத்து, கோயில் கட்டுவதற்கு தனியாக அறக்கட்டளை உருவாக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. பல ஆண்டுகளாக நடந்து வந்த அயோத்தி வழக்கு உச்ச நீதிமன்றம் இன்று வழங்கிய வரலாற்று தீர்ப்பு மூலம் தீர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளதாவது: அயோத்தில் வழக்கில் உச்ச நீதிமன்ற வங்கியுள்ள தீர்ப்பை மதிக்க வேண்டும். நாம் அனைவரும் சமூக நல்லிணக்கத்தை பேண வேண்டும். இந்தியர்கள் அனைவரிடையேயும் சகோதரத்துவம், நம்பிக்கை மற்றும் அன்பை பேண வேண்டிய நேரம் இது என்று என்று கூறியுள்ளார்.