மகாராஷ்டிரத்தில் நிலவி வரும் அரசியல் சூழல் தொடர்பாக திங்கள்கிழமை மாலை 4 மணியளவில் அடுத்தகட்ட ஆலோசனை நடைபெறவுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் தில்லியில் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் சிவசேனைக்கு ஆதரவு அளிப்பதா வேண்டாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில், மாலை 4 மணியளவில் காங்கிரஸ் கட்சியின் அடுத்தகட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். இதில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய கட்சிப் பிரமுகர்கள் பங்கேற்பார்கள் எனவும் கூறினார்.
இதனிடையே, ஆட்சியமைப்பது தொடர்பாக சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்ரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோர் திங்கள்கிழமை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆட்சியமைப்பது தொடர்பாக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.