‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக, தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் மருத்துவ உபகரணப் பூங்காக்களை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து அரசு தகவல்கள் தெரிவிப்பதாவது:
4 மருத்துவ உபகரணப் பூங்காக்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, தமிழகம், கேரள மாநிலங்களில் இந்தப் பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளன.
இதேபோன்ற பூங்காக்களை உத்தரகண்ட் மற்றும் குஜராத்திலும் அமைக்க வேண்டும் என அந்த மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
சிகிச்சைக்கு தேவையான உலகத்தரம் வாய்ந்த உபகரணங்களை குறைந்த விலையில் உருவாக்கித் தரும் வகையில் இந்தப் பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளன.
நிறுவனங்கள் எளிதாக வந்து தொழில்தொடங்கும் வகையில் இந்த மருத்துவப் பூங்கா அனைத்திலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் மருத்துவ உபகரணங்களின் சந்தை மதிப்பு ரூ.70,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆசிய அளவில் நான்காவது மிகப்பெரிய சந்தையை இந்தியா கொண்டிருந்தாலும் மருத்து உபகரண தயாரிப்பு நிறுவனங்கள் மிக குறைந்த அளவுக்கே நாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.