ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்பூரின் துது மாவட்டத்தில் உள்ள சம்பார் ஏரியின் அருகே 20 முதல் 25 வகைகளைச் சேர்ந்த 1,000 பறவைகள் மர்மமான முறையில் செவ்வாய்கிழமை உயிரிழந்துள்ளன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக வனப்பாதுகாப்புத்துறை துணை அதிகாரி சஞ்சய் கௌஷிக் கூறுகையில்,
சம்பார் ஏரியின் அருகே 20 முதல் 25 வகைகளைச் சேர்ந்த சுமார் 1,000 பறவைகள் மர்மமான முறையில் செவ்வாய்கிழமை காலை உயிரிழந்துள்ளன. பறவைகளின் மர்ம மரணம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்படும். அனைத்து பறவைகளின் உடல்களும் உடற்கூறு ஆய்வு செய்யப்படும்.
இந்த சம்பவத்தில் பறவைகள் வேட்டையாடப்பட முயன்றதற்கான வாய்ப்புகள் இல்லை. எனவே ஏரித் தண்ணீரின் மோசமான தரம் காரணமாக இந்த இறப்பு ஏற்பட்டிருக்கலாம். சம்பார் ஏரியின் தண்ணீரின் தரமும் பரிசோதிக்கப்படும் என்று தெரிவித்தார்.