பிகார் மாநிலம் கிழக்கு சம்பரான் பகுதியில் பொது சமையல் கூடத்தில் இருந்த கொதிகலன் வெடித்து சனிக்கிழமை விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர், மேலும் 5 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சுகௌலி எனும் பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு மதிய உணவு தயாரித்து வழங்கும் போது தனியார் தன்னார்வ அமைப்பின் சமையலறையில் அமைந்துள்ள கொதிகலன், சனிக்கிழமை அதிகாலை வெடித்து விபத்து ஏற்பட்டது. உடனிடியாக அங்கு விரைந்த அதிகாரிகள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதில் சிகிச்சை பெற்று வருபவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக முசாஃபர்பூர் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.