புது தில்லி: ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை நீக்குவதில் மத்திய அரசு முழு கவனம் செலுத்தியதுபோல், தலைநகா் தில்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்துவதற்கும் தீவிர கவனம் செலுத்தியிருக்கலாம் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபல் கூறியுள்ளாா்.
தில்லியில் கடந்த சில நாள்களாக காற்று மாசு அதிகரித்துக் காணப்பட்டாலும், சனிக்கிழமை காலை காற்று மாசு சற்று குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், காற்று மாசு குறித்து கபில் சிபல் தனது சுட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
நாம் செய்த சிறுசிறு தவறுகளுக்காக, இயற்கை நம்மை தண்டித்துக் கொண்டிருக்கிறது. சுவாசிப்பதற்கான அடிப்படை உரிமையை இழந்து கொண்டிருக்கிறோம்.
ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்வதைக் காட்டிலும், சுவாசிப்பதற்கான நமது உரிமை முக்கியமல்லவா?
அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்வதில் மத்திய அரசு செலுத்திய அக்கறையை, காற்று மாசைக் கட்டுப்படுத்துவதிலும் காட்டியிருக்கலாம் என்று அந்தப் பதிவில் கபில் சிபல் குறிப்பிட்டுள்ளாா்.