புதிய கல்விக் கட்டணத்தை தங்களால் செலுத்த முடியாது என்று கூறிப் போராடும் ஜேஎன்யு மாணவர்களில் 58 சதவீதம் பேர் வறுமை கோட்டை சேராதவர்கள் ஆவர். 2017-18 நிதியாண்டின் அடிப்படையில் இவர்களது குடும்ப மாத வருமானம் 12 ஆயிரத்தையும் விட அதிகமானது எனப்து இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் சில மாணவர்களின் மாதாந்திர குடும்ப வருமானம் ரூ.10 லட்சம் என்பதும் தெரியவந்துள்ளது.
பல்கலைக்கழக கையேட்டின் படி, சேர்க்கை பெறும் மாணவர்கள் தங்கள் வருமானத்தின் அடிப்படையில் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறார்கள். குடும்ப வருமானம் மாதத்துக்கு ரூ. 6,000-க்கு குறைவாகவும், ரூ. 6,000 முதல் ரூ. 12,000 வரையிலும், ரூ. 12,000-க்கு மேல் என்று பிரிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் சேர்க்கைக்கான தகுதிப் புள்ளிகள் ஒதுக்கப்படுகின்றன. முதல் வகையைச் சேர்ந்தவர்கள் மற்ற இருவரையும் விட அதிக புள்ளிகளைப் பெறுகிறார்கள். கடந்த 4 ஆண்டுகளின் சேர்க்கை தரவின்படி, பெரும்பான்மையான மாணவர்கள் மூன்றாம் வகையைச் சேர்ந்தவர்கள் என்பதை இந்த ஆய்வறிக்கை தெளிவாகக் காட்டுகிறது.
இதுதவிர, வருமானத்தின் அடிப்படையில் மாணவர்களை வகைப்படுத்துவது குறைந்தது 35 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விலைவாசியின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட அதே அளவுகோல் இன்றளவும் பின்பற்றப்படுவதாக முன்னாள் பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். அன்று முதல், வருமான நிலைகள் உயர்ந்து, வறுமையை வகைப்படுத்துவது பல முறை திருத்தப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மாணவர்களில் பலரும் கட்டண உயர்வை ஏற்க முடியும் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். "குறைந்தது 50 சதவீத மாணவர்கள் இந்த கட்டணத்தை உயர்வை ஏற்றுக்கொள்ள முடியும், ஆனால், எங்கள் போராட்டம் ஏழை மாணவர்களுக்கானது" என்று தெரிவித்துள்ளனர். இந்த புதிய கட்டணத்தின் அடிப்படையில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு சலுகைகள் கிடைக்கும் என்று பல்கலைக்கழகம் அறிவித்தபோதும், மாணவர்கள் தங்கள் போராட்டத்தில் இருந்து பின்வாங்கவில்லை.
சில முன்னாள் ஜேஎன்யு அதிகாரிகளும், மாணவர்களும் இந்த உயர்வுக்கு ஆதரவாக உள்ளனர். "மாணவர்கள், ஆசிரியர்கள், துணைவேந்தர் மற்றும் (மனிதவள மேம்பாட்டு) அமைச்சக அதிகாரிகள் அடங்கிய ஒரு குழுவை அமைத்து, கட்டண உயர்வு குறித்து ஒருமித்த முடிவுக்கு வருவதே பிரச்னைக்கு சிறந்த தீர்வாகும். ஒருவருக்கொருவர் எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம் பிரச்னையை தீர்க்க முடியாது”என்று ஜேஎன்யு பேராசிரியர் ஆனந்த் குமார் கூறினார்.
நிர்வாகக் குழு கூடி வறுமைக் கோட்டின் கீழ் வரும் மாணவர்களுக்கு 50 சதவீத தள்ளுபடி செய்ய பரிந்துரைத்தால், இதிலிருந்து ஒரளவு நிவாரணம் கிடைக்கும். இந்த கட்டணம் மற்ற பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடுகையில் ஒன்றுமில்லை. எத்தனை முறை சலுகைகளை வழங்க முடியும்? பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு நிலையான மானியத்தை அளிக்கிறது. செலவுகள் அதிகரித்தால், யுஜிசி-யிடம் பரிந்துரைக்க வேண்டும். அவர்கள் அதிக மானியம் வழங்கலாம் அல்லது மறுக்கக்கூடும். போராட்டத்தை கண்ணியமாக நடத்த வேண்டும் என்று சில முன்னாள் மாணவர்களும் கண்டித்துள்ளனர் என்று ஒரு முன்னாள் அதிகாரி கூறினார்.