தற்கொலை செய்துகொண்ட பழங்குடியின விவசாயி உடல் 6 நாட்களுக்கு பின் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் அகோலா மாவட்டம் பிம்பலோலி கிராமத்தின் பழங்குடியின பிரிவைச் சேர்ந்த துளசிராம் ஷிண்டே (62) விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் அம்மாநிலத்தில் வரலாறு காணாத மழை பெய்தது இதனால் பல ஆயிரம் ஹெக்டர் பயிர்கள் நாசமாயின.
இதில் ஷிண்டே நிலத்தின் சோயா பயிர்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ஷிண்டே, அகோலா நகரில் இருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள நவகான் வனப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதனிடையே, நவம்பர் 13-ஆம் தேதி முதல் ஷிண்டேவைக் காணவில்லை என அவரது உறவினர்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து போலீஸார் தீவிரமாக தேடி வந்துள்ளனர். அப்போது அடர்ந்த வனப்பகுதியில் அழுகிய நிலையில் பிணம் செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டது. பின்னர் அது ஷிண்டே என அடையாளம் காணப்பட்டது.
அடர்ந்த வனப்பகுதியில் இருந்ததால் ஷிண்டே உடலை மீட்க தாமதமானது. அவரது உடல் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. எனவே இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம் என சன்னி போலீஸ் நிலைய ஆய்வாளர் கணேஷ் வனரே தெரிவித்துள்ளார்.
பயிர்கள் சேதமடைந்தது, குடும்ப பொருளாதார சூழல் மோசமடைந்தது உள்ளிட்ட காரணங்களால் ஷிண்டே தற்கொலை செய்திருக்கலாம் என அவரது குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.