புது தில்லி: சபரிமலைக்காக தனிச்சட்டம் உருவாக்குங்கள் என்று கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேரளாவில் உள்ள குருவாயூர் உள்ளிட்ட கோயில்களைப் போல, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்காக தனிச்சட்டம் உருவாக்குங்கள் என்று கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
எங்களது உரிமைகளைப் பாதுகாக்கவும் என்று கோரி பண்டலம் ராஜ குடும்பத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கான தனிச்சட்டம் குறித்து வரும் ஜனவரி மாதம் மூன்றாவது வாரத்துக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஏற்கனவே, சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான மறுஆய்வு மனுவை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்ட நிலையில், கேரள அரசுக்கு தற்போது இதுபோன்ற அறிவுறுத்தலை உச்சநீதிமன்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.