மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பமாக அம்மாநில முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ், சனிக்கிழமை மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். இதில் அதிரடித் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார், துணை முதல்வராக பதவியேற்றார். ஆளுநர் பகத் சிங் கோஷியாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
நேற்று வரை சிவசேனாவுக்கு ஆதரவு தெரிவித்த சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், பாஜகவுக்கு திடீரென ஆதரவளித்துள்ளதை அடுத்து மகாராஷ்டிர அரசியலில் யாரும் எதிர்பாராத விதமாக திடீர் திருப்பம் ஏற்பட்டு பெரும் அரசியல் பரபரப்பு நிலவுகிறது.
இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி கூறுகையில்,
நான் ஏற்கனவே தெரிவித்ததைப் போன்று அரசியலும், கிரிக்கெட்டும் ஒன்றுதான். இரண்டிலும் எப்போதும் வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் நடக்கும், திடீர் திருப்பங்கள் ஏற்படக்கூடும். எனது அந்த கருத்தை இப்போது அனைவரும் புரிந்துகொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன் என தெரிவித்தார்.