மகாராஷ்டிர அரசியலில் பாஜகவைச் சோ்ந்த தேவேந்திர ஃபட்னவீஸை முதல்வராகவும், என்சிபி கட்சியைச் சோ்ந்த அஜித் பவாரை துணை முதல்வராகவும் பதவிப் பிரமாணம் செய்து வைத்த ஆளுநா் பகத்சிங் கோஷியாரியின் நடவடிக்கைக்கு எதிராக சிவசேனை-என்சிபி-காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தில் கூட்டாக மனு தாக்கல் செய்தன.
இதையடுத்து, மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு புதன்கிழமை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என மீது உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் கூறுகையில், சத்தியம் வென்றுள்ளது. 30 மணிநேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு பாஜக-வுக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. ஆனால், எங்களால் 30 நிமிடத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்றார்.
தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் நவாப் மாலிக் கூறியதாவது, உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியுள்ள இந்த உத்தரவானது நாட்டின் ஜனநாயகத்தின் மைல்கல்லாகும். நாளை 5 மணிக்குள் பாஜக-வின் ஆட்டம் முடிவுக்கு வந்துவிடும். அடுத்த சில நாட்களில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் சிவசேனை கூட்டணி ஆட்சி மலரும் என்று தெரிவித்தார்.