மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு புதன்கிழமை (அக்.2) காலை 11 மணியளவில் உத்தரப்பிரதேச சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது. இந்த சிறப்புக் கூட்டத்தொடரை எதிர்கட்சிகள் புறக்கணித்தன. இதையடுத்து எதிர்கட்சிகளுக்கு மகாத்மா காந்தியின் கொள்கைகள் மீது நம்பிக்கை இல்லை என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சித்திருந்தார்.
இந்த சிறப்புக் கூட்டத் தொடர் தொடர்பாக அனைத்து கட்சிகளுடனும் ஆலோசித்து அவர்களின் முடிவிலேயே நடத்தப்பட்டதாக பேரவைத் தலைவர் ஹிருதய் தீக்ஷித் தெரிவித்திருந்தார். ஆனால், ஒப்புக்கொண்ட பின்பும் எதிர்கட்சிகள் புறக்கணித்திருப்பது தேவையற்றது எனவும் விமர்சித்தார்.
ஆளும் பாஜக-வைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இந்த சிறப்புக் கூட்டத்தொடரில் பங்கேற்றனர். சுமார் 36 மணிநேரங்கள் நடைபெற்ற இந்தக் கூட்டத்தொடர் வியாழக்கிழமை நள்ளிரவு 1 மணி வரை நடைபெற்றது. அப்போது வரை முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் பங்கேற்றார். மேலும் தனது அரசின் சாதனைகளை எடுத்துரைத்தார். இதில் தனக்கு உறுதுணையாக உள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில், தொடர்ந்து 36 மணிநேரங்களாக இயங்கி உத்தரப்பிரதேச சட்டப்பேரவை வியாழக்கிழமை புது சாதனைப் படைத்தது.