காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயற்சி செய்த பாகிஸ்தான் தீவிரவாதிகளை இந்திய பாதுகாப்புப் படையினர் விரட்டியடித்தனர்.
காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து, எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்வதும், அதனை பாதுகாப்புப் படையினர் முறியடிப்பதும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் நவ்காம் செக்டாரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப்பாதுகாப்புப் படையினர், தீவிரவாத கும்பலை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். எல்லைப் பாதுகாப்புப் படையினரின் தீவிர தாக்குதலை அடுத்து தீவிரவாதக் கும்பல் பின்வாங்கியது.
இதேபோன்று, கடந்த செப்டம்பர் 12, 13 தேதிகளில், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்தனர். இந்திய ராணுவம் அவர்களின் தாக்குதலை முறியடித்தது குறிப்பிடத்தக்கது.
எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்து வரும் நிலையில், காஷ்மீரின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.