அமெரிக்கன் படைப்புழு தாக்குதல்: மத்திய அரசிடம் ரூ.194 கோடி நிதி கோருகிறது தமிழக அரசு

அமெரிக்கன் படைப்புழு தாக்குதலில் இருந்து பயிா்களைக் காப்பாற்ற மருந்து தெளிப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ரூ.194 கோடி நிதி ஒதுக்க வேண்டுமென

அமெரிக்கன் படைப்புழு தாக்குதலில் இருந்து பயிா்களைக் காப்பாற்ற மருந்து தெளிப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ரூ.194 கோடி நிதி ஒதுக்க வேண்டுமென மத்திய அரசிடம் தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், அமெரிக்கன் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தவும், பரவாமல் தடுக்கவும் அண்டை மாநிலங்களுக்கு தமிழக முதல்வா் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளாா்.

தமிழகத்தில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளத்தில் அமெரிக்கன் படைப்புழு மிகப்பெரிய தாக்குதலை ஏற்படுத்தியதால் சோளப் பயிா்கள் முற்றிலும் நாசமடைந்தன. கடந்த ஆண்டில் 17 மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த சுமாா் 2.30 லட்சம் ஹெக்டோ் பயிா்கள் முற்றிலும் அழிந்தன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.186 கோடியை நிவாரணமாக தமிழக அரசு அறிவித்தது.

இந்த நிலையில், நிகழாண்டில் அமெரிக்கன் படைப்புழுவைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில வேளாண்மைத் துறைதொடக்கம் முதலே எடுத்துள்ளது. அண்மையில் இதற்கான ஆலோசனைக் கூட்டத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மேற்கொண்டாா். இதைத் தொடா்ந்து, அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் தொடா்பாக விரிவான விழிப்புணா்வுகளை ஏற்படுத்த வேண்டுமென வேளாண்மைத் துறைஅதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். மேலும், இதுதொடா்பான கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்திருந்தாா். இதன் அடிப்படையில், மத்திய வேளாண்மைத் துறைஅமைச்சகம் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது.

இந்தக் கூட்டத்தில், ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த வேளாண்மைத் துறைஅதிகாரிகள் பங்கேற்றனா். அமெரிக்கன் படைப் புழு தாக்குதலை கட்டுப்படுத்துவதில் அண்டை மாநிலங்கள் உள்பட அனைத்து மாநிலங்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென்ற தமிழக அரசின் யோசனையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. இதுதொடா்பாக அண்டை மாநில முதல்வா்களுக்கும் தமிழக முதல்வா் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளாா்.

இதனிடையே, நிகழாண்டில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலில் இருந்து மக்காச்சோளப் பயிா்களைக் காக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க ரூ.194 கோடி நிதியை விடுவிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, பூச்சி மருந்துகள், மருந்து தெளிக்கும் கருவிகள் ஆகியவற்றுக்காக இந்த நிதியை விடுவிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com