துபையில் இருக்கும் கேரள வம்சாவளியினர் அந்த மாநிலத்தில் ரூ.10,000 கோடிக்கு முதலீடுகள் மேற்கொள்ள இருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
வெளிநாடுவாழ் கேரள மக்களின் வளர்ந்து வரும் தொழில்முனைவோர் கூட்டம் துபையில் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்றது. அப்போது, கேரள வம்சாவளி தொழிலதிபர்கள் இந்த முதலீடுகள் தொடர்பாக பினராயி விஜயனிடம் உறுதியளித்தனர்.
முதலீடுகள் மேற்கொள்வதற்கான மிகச் சிறந்த மாநிலமாக கேரளத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருவதாக பினராயி விஜயன் அவர்களிடம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:
வெளிநாடுவாழ் கேரள மக்களின் வளர்ந்து வரும் தொழில்முனைவோர் கூட்டத்தின்போது, கேரளத்தில் ரூ.10,000 கோடி மதிப்பில் முதலீடுகள் செய்வதாக துபை வாழ் கேரள தொழிலதிபர்கள் உறுதியளித்தனர். அதன்படி, டிபி வேல்ட் நிறுவனம் ரூ.3,500 கோடி, ஆர்பி குழுமம் ரூ.1,000 கோடி, லுலு குழுமம் ரூ.1,500 கோடி, ஆஸ்டர் நிறுவனம் ரூ.500 கோடி, பல்வேறு சிறு தொழில் நிறுவனங்கள் ரூ.3,500 கோடி மதிப்பில் கேரளத்தில் முதலீடு செய்ய இருக்கின்றன.
இதில் டிபி வேல்ட் நிறுவனம் சரக்கு போக்குவரத்து துறையிலும், ஆர்பி குழுமம் சுற்றுலாத் துறையிலும் லுலு குழுமம் சில்லரை வணிகத் துறையிலும், ஆஸ்டர் நிறுவனம் சுகாதாரத் துறையிலும் முதலீடுகள் செய்ய உள்ளன. கேரளத்தில் முதலீடு செய்யும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு உதவும் வகையில் உயர்நிலை முதலீட்டாளர்கள் குழு ஒன்று ஏற்படுத்தப்படும்.
கொச்சியில் வரும் டிசம்பர் மாதம் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்று பினராயி விஜயன் அந்தப் பதிவில் கூறியுள்ளார்.