தேசப் பாதுகாப்பிலும், மீட்பு நடவடிக்கைகளின் போதும் துரிதமாக செயல்பட்டு நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முப்படைகளில், விமானப்படையை சிறப்பிக்கும் விதமாக இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
அவ்வகையில், 87-ஆவது தேசிய விமானப்படை தினம் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு விமானப்படை சார்பில் விடியோப் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. விமானப்படை வீரர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பெருமைக்குரிய நமது தேசம் என்றும் தலைவணங்குகிறது. தியாகம் மற்றும் சேவை மனப்பான்மையுடன் நமது விமானப்படை என்று பணியாற்றி வருகிறது என்று தேசிய விமானப்படை தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
முன்னதாக, ராணுவத் தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி ராகேஷ் குமார் சிங் பதௌரியா மற்றும் கப்பல்படை தளபதி கரம்பீர் சிங் என முப்படைத் தளபதிகளும், விமானப்படை தினத்தை முன்னிட்டு தில்லியில் உள்ள தேசிய போர் நினைவகத்தில் மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து விமானப்படை தளபதி ராகேஷ் குமார் சிங் பதௌரியா, செய்தியாளர்களிடம் பேசுகையில்,
பயங்கரவாத ஊடுருவல்கள் ஒடுக்கப்பட்டு, பயங்கரவாதம் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும். புல்வாமா தாக்குதல் போன்றவை நாட்டின் பாதுகாப்புத்துறைக்கு சவால் விடும் அளவிலான அச்சுறுத்தலை ஏற்படுத்தியதற்கு ஒரு சான்றாகும். நமது அண்டை நாட்டின் சூழல் நமது பாதுகாப்பை கேள்விக்குரியாக்குகிறது.
ஆனால், தற்போதுள்ள நாட்டின் தலைமை பயங்கரவாதத்துக்கு எதிராக துணிச்சலுடன் நடவடிக்கை எடுத்து வருகிறது. பயங்கரவாதத்துக்கு எதிராக இந்த அரசின் நடவடிக்கைகள் குறிப்பிடும்படியாக வரவேற்கத்தக்க வகையில் உள்ளது என்று தெரிவித்தார்.