பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்களை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (செவ்வாய்கிழமை) முறைப்படி பெற்றுக் கொண்டார்.
தேசிய விமானப் படை தினமும், விஜயதசமி தினமுமான இன்று (செவ்வாய்க்கிழமை), பிரான்ஸின் துறைமுக நகரமான போர்டோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல் ரஃபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. முதல் விமானத்தை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முறைப்படி பெற்றுக் கொண்டார்.
இதையடுத்து, ரஃபேல் விமானத்தின் டயரின் கீழ் எலுமிச்சை வைத்து, விமானத்தின் மீது தேங்காய், பூ உள்ளிட்ட பொருட்களுடன் ஹிந்தி மொழியில் ஓம் என்று எழுதி ராஜ்நாத் சிங் பூஜை செய்தார். இதைத்தொடர்ந்து, அவர் ரஃபேல் விமானத்தில் முன்னோட்டப் பயணம் மேற்கொள்கிறார்.
முன்னதாக,
பிரான்ஸின் ‘டஸால்ட் ஏவியேஷன்’ நிறுவனத்திடமிருந்து சுமார் ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரஃபேல் ரக போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்காக, கடந்த 2016-இல் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த போர் விமானம், ஆற்றல் மிகுந்த ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை தாங்கிச் செல்லும் திறன் உள்பட பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டதாகும்.
முதல் ரஃபேல் போர் விமானத்தை முறைப்படி பெற்றுக் கொள்வதற்காக, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 3 நாள் பயணமாக பிரான்ஸ் நாட்டுக்கு திங்கள்கிழமை சென்றடைந்தார்.