குளிர் காலத்தில் காஷ்மீர் எல்லையில் தாக்குதல் நடத்தும் நோக்கில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 20 முகாம்கள் மற்றும் 20 ஏவுதளங்களை உருவாக்கியுள்ளதாகவும் உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய விமானப்படை பாலக்கோட் தாக்குதலை நடத்தியது. அந்த சமயத்தில் இருந்தே, எல்லையில் தாக்குதல் நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் தீவிர முயற்சி செய்து வருகின்றன. ஆனால், நமது பாதுகாப்புப்படை வீரர்களால் தீவிரவாதத் தாக்குதல் முறியடிக்கப்பட்டு வருகிறது.
மேலும், கடந்த ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாகவும் எல்லையில் ஒரு பதற்ற சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில், குளிர்காலம் தொடங்கும் சமயத்தில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் எல்லையில் தாக்குதல் நடத்த முயற்சிப்பது வழக்கமாகி விட்டது.
தற்போது ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பினர் 20 முகாம்களை அமைந்துள்ளதாகவும், ஒரு முகாம்களில் குறைந்தது 50 பேர் வரையில் இருக்கலாம் என்று உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
முகாம்களில் இருக்கும் சுமார் ஆயிரம் பேர் தாக்குதல் நடத்த வசதியாக 20 ஏவுதளங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் இதுதவிர மேலும் ஆயிரம் பேருக்கு தாக்குதல் நடத்த பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் எல்லையில் ராணுவப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையே நடைபெற்று வரும் துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.