மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் விஜயதசமி நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஹெச்சிஎல் நிறுவனர் சிவ நாடார் தலைமை விருந்தினராக பங்கேற்றார்.
கடந்த 1925-ஆம் ஆண்டு விஜயதசமி (செப்டம்பர் 27) தினத்தன்றுதான் நாகபுரியில் ஆர்எஸ்எஸ் அமைப்பு நிறுவப்பட்டது. எனவே, ஆண்டுதோறும் விஜயதசமி அன்று ஆர்எஸ்எஸ் சார்பில் நிறுவன தினம் சிறப்பாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டு விஜயதசமி நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, முன்னாள் தளபதி வி.கே.சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியின் போது ஆர்எஸ்எஸ் தலைவர் உரையாற்றுவது வழக்கம். இந்த உரையில் ஆர்எஸ்எஸ் மற்றும் அதனைச் சார்ந்த பிற அமைப்புகளுக்கான அடுத்த ஆண்டின் செயல் திட்டங்கள் இடம்பெறும்.
வழக்கமாக தேசிய மற்றும் சர்வதேச அளவில் பிரபலமானவர்களை விஜயதசமி நிகழ்ச்சியின் போது ஆர்எஸ்எஸ் அமைப்பு தலைமை விருந்தினராக அழைப்பது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டு முன்னணி தகவல் தொழில்நுட்பு நிறுவனமான ஹெச்சிஎல்-லின் நிறுவனர் சிவ நாடார் பங்கேற்றார்.