புது தில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் 5 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.
தீபாவளியை முன்னிட்டு, மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படியை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம், மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.16,000 கோடி செலவாகும் என்றும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.
மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அளவுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுவது இதுவே முதல் முறை என்றும், தீபாவளியை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் வகையில் மத்திய அரசு இந்த அறிவிப்பினை செய்துள்ளது என்றும் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் இது குறித்த அறிவிப்பினை வெளியிட்டார்.
இதற்கு முன்பு, மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும், அகவிலைப்படி கடந்த பிப்ரவரி மாதம் 3% உயர்த்தப்பட்டு, ஜனவரி 1ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுவது வழக்கம்.