கொஞ்சம் நஞ்சமல்ல.. வராக் கடன் பிரிவில் ரூ. 1.14 லட்சம் கோடியைத் தள்ளுபடி செய்துள்ள பாரத ஸ்டேட் வங்கி!
புது தில்லி: இந்த ஆண்டு மார்ச் - 31ஆம் தேதி வரையிலான நிதியாண்டுப் பிரிவில், வராக் கடன் பிரிவில் ரூ.1.14 லட்சம் கோடியை பாரத ஸ்டேட் வங்கி தள்ளுபடி செய்துள்ள தகவல் தெரிய வந்துள்ளது.
வங்கிகளின் செயல்படாத சொத்துக்கள் மற்றும் மோசமான கடன்கள் தொடர்பான வழக்கு ஒன்றில், உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு வழங்கிய தீர்ப்பில் இவை தொடர்பாக வங்கிகள் தன்னிடம் தாக்கல் செய்யும் விபரங்களை ரிசர்வ் வங்கியானது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியிடலாம் என்று தெரிவித்திருந்தது.
இதையடுத்து தனியார் ஆங்கில செய்தித் தொலைக்காட்சி ஒன்று ஆர்.பி.ஐக்கு தொடர்ச்சியாக ஆர்.டி.ஐ சட்டத்தின் கீழ் மனுக்களை அளித்து பெற்றுள்ள தகவல்களை வியாழன்று வெளியிட்டுள்ளது. அதில் மொத்தம் 11 பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் செயல்படாத சொத்துக்கள், மோசமான கடன்கள் மற்றும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள கடன்கள்பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளன.
இதில் பாரத ஸ்டேட் வங்கியானது ரூ. 100 கோடி மற்றும் அதற்கு மேல் கடன் பெற்றுள்ள 220 வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ. 76, 600 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல 500 கோடி மற்றும் அதற்கு மேல் கடன் பெற்றுள்ள 33 வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ. 37, 700 கோடி கடன் பாரத ஸ்டேட் வங்கியால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மார்ச் - 31ஆம் தேதி வரையிலான நிதியாண்டுப் பிரிவில், 253 வாடிக்கையாளர்களிடம் இருந்து மொத்தமாக ரூ. 1.14 லட்சம் கோடியாய் மோசமான கடனாகக் கருதி பாரத ஸ்டேட் வாங்கி தள்ளுபடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
மொத்தமாக 11 வங்கிகளிலும் சேர்த்து (ரூ. 100 மற்றும் 500 கோடி பிரிவுகளில்) 1051 நபர்களிடம் இருந்து ரூ. 3.42 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி விபரம் தெரிய வருகிறது.