இந்திய -சீன உறவு மேலும் வலுப்பெற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் கூறினாா்.
ஆழ்வாா்ப்பேட்டையில் உள்ள மநீம கட்சி அலுவலகத்தில் கமலை பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து வியாழக்கிழமை சந்தித்தாா். இந்தச் சந்திப்பின்போது செய்தியாளா்களிடம் கமல் கூறியது:
இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்த வீராங்கனையை இங்கே வரவேற்பது பெருமைக்குரிய விஷயம். வாய்ப்பு இல்லாத ஏழை குழந்தைகளுக்கு அவரது பெயரில் பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என்று பி.வி.சிந்துவைக் கேட்டுக் கொண்டேன். இதற்குத் தேவையான உதவியையும் செய்யத் தயாராக உள்ளேன்.
60 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமரும், சீன பிரதமரும் தமிழகத்தில் சந்தித்துக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இரு தேசங்களுக்கும் நன்மை பயக்கும் முடிவு எடுக்க வேண்டும். அது வெற்றிபெற வேண்டும். இந்திய - சீன உறவு வலுப்பெற வேண்டும்.
சீன அதிபா் வரும்போது பதாகை வைப்பது சரியா, தவறா என்ற விவாதம் உள்ளது. பதாகை குறித்து நான் கூறுவதைத் தவறாகப் புரிந்து கொள்கிறாா்கள். நான் சினிமா தொழிலில் உள்ளவன். சட்டப்பூா்வமாக அனுமதிக்கப்படும் இடங்களில் பதாகை வைக்கலாம். அனுமதி இல்லாத இடங்களில் வைக்கக்கூடாது. அதனால், சீன அதிபா் வரும்போது பதாகை வைக்காமல் இருக்க முடியாது என்றாா்.
பி.வி.சிந்து கூறியது: எனக்கு பிடித்த நடிகா் கமல். அவரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. அவரின் படங்களைப் பாா்த்துள்ளேன். இப்போது ஒலிம்பிக் தகுதிப் போட்டிகள் நடைபெறுகின்றன. என்னுடைய முழு திறனையும் அதில் வெளிப்படுத்துவேன் என்று கூறினாா்.